புதுக்கோட்டை, ஏப்.16: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கோடைகால சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பஷீர் அலி தலைமை வகித்தார். செயலாளர் ராஜா, நிர்வாகிகள் தமிழரசன், தியாகராஜன், குமரேசன், தமிழ்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அறிவொளி கருப்பையா பேசியதாவது:
ஆயிரம் அடி ஆழத்தில் இருந்துகூட தண்ணீரை எடுக்க தொழில்நுட்பம் இருக்கிறது. எடுக்கப்படும் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவதில்லை. பெரும்பகுதி வீணாகிறது. ஒருபுறம் குடிநீருக்கான திண்டாட்டம். மற்றொரு புறம் கண்முன்னே பல இடங்களில் பொது குடிநீர் தொட்டி, குழாய்களில் இருந்து குடிநீர் வீணாகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எடுக்கப்படும் தண்ணீரை அதே இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் வகையில் எந்த தொழில்நுட்பமும் இல்லை. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கோடை விடுமுறை காலத்தில் பாடப்புத்தகங்கள் அல்லாத பிற புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். இதற்காக நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
படித்துவிட்டு கதை சொல்லும் பழக்கத்தை மீட்டெடுத்தால்தான் செல்போனிலே எந்நேரமும்
மூழ்கிக் கிடப்போரை மீட்டெடுக்க முடியும். அதுதான் உடலுக்கம், உள்ளத்துக்கும் சிறந்தது. இதற்காக
தமுஎகச சார்பில் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது என்றார்.