தவளக்குப்பம், ஏப். 13: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவின் காரை, பறக்கும் படையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து அரியாங்குப்பம் பகுதியில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சொர்ணாநகருக்கு அவர் சொன்றபோது ேதர்தல் பறக்கும்படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் 2 போலீசார் காரில் வந்து திடீரென பாஸ்கர் எம்எல்ஏவின் காரை சோதனையிட்டனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்க காரில் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
இதனிடையே காரில் தண்ணீர் பாட்டில், சாப்பாடு பொட்டலம்கூட வைத்திருக்கக் கூடாதா? என கேட்டு பறக்கும் படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட என்ஆர் காங்கிரசார், சோதனையிட்ட பறக்கும் படையினரை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்தவர்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த எம்எல்ஏ பாஸ்கர் கொளுத்தும் வெயிலில் குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்கூட எடுத்து வரக்கூடாதா? என கேட்கவே, தேர்தல் விதிமுறைகளின்படிதான் சோதனை நடத்தியதாக கூறிய பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.