புதுச்சேரி, ஏப். 4: புதுவை 100அடி ரோட்டில் தாறுமாறாக ஓடிய சுற்றுலா வாகனம் மோதி சாலையோம் நிறுத்தியிருந்த 3 வாகனங்கள் சேதமடைந்தன. புதுச்சேரி, இந்திராகாந்தி சிலையில் இருந்து மரப்பாலம் செல்லும் வரையிலான பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று சாலையோரம் லோடு கேரியர், லாரி உள்ளிட்ட வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனிடையே நேற்று காலை 10 மணியளவில் சுற்றுலா வந்த ஜார்கண்ட் கல்லூரி மாணவர் ஓட்டிவந்த ஒரு கார் தாறுமாறாக ஓடி 100 அடி ரோடு மேம்பாலம் ஏறும் பகுதியில் (ஜெயமூர்த்தி ராஜா நகர் செல்லும் சாலை அருகில்) இடதுபுறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடுத்த 3 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விபத்தை ஏற்படுத்திய காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் வண்டியை ஓட்டிவந்த டிரைவர் படுகாயமடைந்தார். மேலும் கார் மோதியதில் சாலையோரம் நிறுத்தியிருந்த லோடு கேரியர் வண்டியின் சைடு, முன்புற பகுதி சேதமடைந்தது. மற்றொரு வண்டியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. மேலும் ஒரு லாரியும் லேசான சேதமடைந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவே, தகவலின்பேரில் அங்கு விரைந்த கிழக்கு டிராபிக் எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார், கார் விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.