காலாப்பட்டு, ஜூலை 15: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் அன்புஜோதி ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பல்வேறு கொடுமைகள் செய்ததாகவும், சிலர் காணாமல் போனதாகவும் புகார் எழுந்தது. ஆசிரமத்தின் கிளை அலுவலகம் புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலியார்சாவடி, வாத்தியார் தோட்டம் பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து அன்புஜோதி ஆசிரமம் தொடங்கப்பட்டு, 126 முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், ஆசிரமத்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்குப்பிறகு அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளது. சிபிசிஐடி போலீசார், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின் பேபி உள்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இந்நிலையில் நேற்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன் முன்னிலையில் `சீல்’ அகற்றப்பட்டு, ஆசிரம கட்டிடத்துக்கு உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில பொருட்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன், கிராம நிர்வாக உதவியாளர் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.