திருவில்லிபுத்தூர், ஜூன் 19: திருவில்லிபுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபரை நகர் போலீசார் கைது செய்து, அவருடைய கார், பைக் புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருவில்லிபுத்தூர் நகர் எஸ்ஐ கணேசன் சக போலீசாருடன் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கலை செல்வன் (41) என்பவர் தனது டூவீலரில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் இருந்தன. இதனை தொடர்ந்து அவரை பிடித்து மேல் விசாரணை செய்தபோது அவர்தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கொண்டு செல்ல காரையும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்து கார் மற்றும் டூவீலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ82,176 பணம், செல்போன் ஆகியவற்றை நகர் போலீசார் பறிமுதல் செய்தனர்.