வேலாயுதம்பாளையம், மார்ச் 14: கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண்டர், பட்டப்படிப்பு ஊக்கத்தொகை போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்….