சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது. தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களும் ஜூன் மாத தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த மாணவர்கள் அனைவருக்கும் தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிளஸ்2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்….