புதுக்கோட்டை, மார்ச்17: சிறப்பாக செயல்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, கலை திருவிழா என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓட்டப் பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா, நேற்று பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட 3 விடுதி காப்பாளினிகளுக்கு கலெக்டர் கேடயம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.