சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: 2022-23ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளர் சீரமைப்பு பள்ளி, விடுதிகள் மற்றும் இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி /பள்ளி விடுதிகளின் நிர்வாகம், 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் முறையாக நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்த மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் தகுதியானவர்களுக்கு சென்றடைய வேண்டும்.வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சார்ந்தவர்களுக்கு சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வீடற்ற ஏழை/எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சார்ந்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த துறை சார்பில் நலவாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும். விடுதிகளை நல்ல முறையில் பராமரிப்பு செய்து மாணவ, மாணவிகள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்குதுடன், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….