கோவை, மே 23: பிரியாணி குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பரப்பியது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகரில் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகிறதா? என்று கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பின் போது கோவையில் ‘பிரியாணி ஜிஹாத்’ என்ற பெயரில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும், முஸ்லிம்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை செய்வதாகவும்,
அதை போலீசார் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் பொய்யான பதிவுகள் வெளியாகி இருப்பது தெரியவந்தது. இதனை சைபர் கிரைம் போலீசார் பார்த்தனர். இந்த பதிவுகளை வெளியிட்ட 9 டுவிட்டர் பதிவர்கள் மீது சைபர் கிரைம் போலீஸ் எஸ்ஐ தாமரைக்கண்ணன் புகார் அளித்தார். அதன்படி, 9 டுவிட்டர் பதிவர்கள் மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிவிட்டரில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சமூகவலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.