பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கலா (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 2019ம் ஆண்டு கோடம்பாக்கம் வேதாச்சலம் நகரை சேர்ந்த பாலு (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில நாட்களிலேயே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி கலாவுக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில், கலாவையும், அவரது அப்பாவையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி எழுதப்பட்டு இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கலா, இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னையும், தனது அப்பாவையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மெயில் வந்துள்ளதாகவும், அதை அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். இந்த புகாரை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கலாவின் கணவர் பாலு, அந்த இ-மெயிலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பாலு மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்….