நாகர்கோவில்: பிபின் ராவத் மரணம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பண்டாரபரம்பு பகுதியை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் ஷிபின் (24). இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம், இவர் தனது சமூக வலை தள பக்கத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக, அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கடை போலீசார் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஷிபின் சமூக வலை தள பக்கத்தில் இருந்து அவர் பதிவிட்ட கருத்துக்களை சேகரித்தனர். பின்னர் இது தொடர்பாக நேற்று காலை ஷிபினை, அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைதான அவர் நேற்று மதியம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (ஏ), 505 (1 பி), 504 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக சமூக வலை தளங்களை கண்காணித்து வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். …
பிபின்ராவத் மரணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இன்ஜினியர் கைது: குமரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
previous post