அரியலூர்,ஜன.3: அரியலூரை சேர்ந்த பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் 15வது தவணைத் தொகையை பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு மற்றும் நிலப் பதிவேற்றத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது கடந்த பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளில் விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 15வது தவணையை பெறுவதற்கு நிலப்பதிவேற்றத்தை உறுதி செய்தல் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காத விவசாயிகளுக்கு அஞ்சல் நிலைய வங்கியில் புதிய வங்கி கணக்கு தொடங்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வரும் 15ம்தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் பங்கு பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.