பாவூர்சத்திரம், நவ.24: தென்காசியில் மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டியில் பாவூர்சத்திரம் அசிசி பள்ளி மாணவி வெற்றிபெற்றதோடு மாநில போட்டிக்குத் தகுதி பெற்றார். 2023-24ம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தென்காசி ஐ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் நடந்தது. 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவி கின்ஸி பாரா, 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டியில் வெற்றிபெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை வென்றார். இதன்மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றார். சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தாளாளர் அந்தோனி சேவியர், முதல்வர் குணரேவதி, துணை முதல்வர்மோகனாம்பிகை, சீனியர் முதல்வர் இசக்கியம்மாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்- அலுவலர்கள் பாராட்டினர்.