நெல்லை, டிச. 4: பாளை சவேரியார் பேராலய விழாவையொட்டி நேற்று காலை பெருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாளை சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி ெகாடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலிகளும், மறையுரைகளும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவேரியாரின் சப்பர பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. சப்பர பவனி தெற்கு பஜார், ேகாபால சுவாமி கோயில், மார்க்கெட் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தில் நிறைவடைந்தது.
விழாவில் நேற்று காலையில் திருப்பலிக்கு முன்பாக சவேரியார் சப்பரம் மார்க்கெட் பரதர் தெரு வழியாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. காலை 5.30 மணிக்கு கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட பேராசிரியர் சூசை செல்வராஜ் அடிகளார் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. காலை 7.30 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது.
நிகழ்ச்சியில் ஆயர் இல்லம் முதன்மை செயலாளர் ஞானபிரகாசம், பொருளாளர் அந்தோனிசாமி, ஆயரின் செயலர் மைக்கேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து உறுதிப்பூசுதலும், அருள் சாதனமும் வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்தவுடன் காலை உணவை மர வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர். நேற்று மாலை 6 மணிக்கு கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் தலைமையில் திருப்பலியும், கொடியிறக்கமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சந்தியாகு, உதவி பங்கு தந்தையர்கள் மிக்கேல்மகேஷ், ஜோ பிரான்சிஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.