கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சாலைபுதூர் மீனாட்சிநகரைச் சேர்ந்தவர் சிவன்துரை. இவரது மனைவி ஜெயந்திகிருஷ்ணா (24). தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் உரிமையாளரும், டாக்டருமான முரளி (50) என்பவர், கடந்த 23ம்தேதி ஜெயந்திகிருஷ்ணாவிடம் ‘மருத்துவமனை உள்நோயாளிகளை பார்க்க ரவுன்ட்ஸ் செல்ல வேண்டும்’ என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஆட்கள் இல்லாத அறையில் வைத்து அவரது கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்திகிருஷ்ணா, டாக்டரை கண்டித்தார். அதன்பிறகு சில நாட்களில் மருத்துவமனை நிர்வாகம் ஜெயந்திகிருஷ்ணாவை வேலையில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பினாயிலை குடித்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த ஜெயந்திகிருஷ்ணாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.இதுதொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ மகேஸ்வரி விசாரணை நடத்தி டாக்டர் முரளி மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவு (பெண்களை கையை பிடித்து இழுத்தல்), 4வது பிரிவு (பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….