சென்னை: பாரிமுனை உள்ளிட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பாரிமுனை, மண்ணடி, பூக்கடை, சவுகார்பேட்டை, பார்க்டவுன் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் வந்து தங்குவது வழக்கம். வட மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனை தடுக்கும் விதமாக பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல் பூக்கடை, பார்க் டவுன், சவுகார்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். நேற்று என்ஐஏ அதிகாரிகள் கொடுங்கையூர் மற்றும் தென் மாவட்டங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….