திருப்பூர், அக்.8: வேளாண்மை துணை இயக்குனர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பாரம்பரிய நெல் ரக விதைகள், வேளாண்மைத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை மற்றும் வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.50 ஆகும். விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25 வீதம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் நெல் வழங்கப்படுகிறது. எனவே, சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறிள்ளார்.