திருப்பூர், அக்.8: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் மத்திய போலீசார் அடங்கிய குழுவினர் திருப்பூர் ஏ.பி.டி ரோடு, மங்கலம் ரோடு, முருகம்பாளையம் கே.வி.ஆர் நகர், செல்லம் நகர், ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
16 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவற்றில் ஐந்து கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லிப், ஹான்ஸ் ஆகியவை கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் இது வரை 234 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 70 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை குற்றத்திற்கு 5 ஆயிரமும், இரண்டாவது முறை குற்றத்திற்கு பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 43 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.