கும்பகோணம், ஏப்.22:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் டிஎஸ்பி பூரணி தலைமையில், பாபநாசம் ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தற்போது கோயில்களில் அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் நேரா வண்ணம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் போக்குவரத்து சாலை விதிகளை கடைப்பிடித்து வாகன ஓட்டிகள் செல்லவும், போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வரும் வகையில் காவல்துறையினர் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர்கள் அம்மாபேட்டை கரிகால் சோழன், பாபநாசம் கலையரசி, கபிஸ்தலம் அனிதா கிரேசி, அய்யம்பேட்டை வனிதா, அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் மற்றும் அனைத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், தலைமை எழுத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.