தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று தொகுதிக்கு உட்பட்ட பொருங்களத்தூர் பகுதியில் அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். அப்போது அவர்களிடையே எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘‘பெருங்களத்தூர் பகுதியில் முக்கியமான பிரச்னை குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லாதது தான். இதனால் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை ஆங்காங்கே தெருவில் போட்டு தீயிட்டு எரித்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறார்கள். அதேபோல், பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதிக்கு வர வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த இரண்டிலும் அதிகம் கவனம் செலுத்துவேன். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில், பொது மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, திமுக ஆட்சி அமைக்க வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடன் இருந்தனர்….