திருவண்ணாமலை, மே 6: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்களிடம் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. திருவண்ணாமலையில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதையொட்டி, பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். மேலும், திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கிரிவலப்பாதையில் அறிவொளி பூங்கா பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம், விருதாச்சலம் நகர போக்குவரத்து காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சிவபெருமான் என்பவர், குற்றச்சம்பங்களை தடுத்தல், போதை பழகத்துக்கு எதிரான விழிப்புணர்வு பாடல்களை பாடியபடி போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். சீருடை அணிந்த போக்குவரத்து காவலர், விழிப்புணர்வு பாடல்களை ராகத்துடன் மெட்டமைத்து பாடியது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இவர் பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், விழிப்புணர்வு பாடல்களை பாடிய போக்குவரத்து காவலர் சிவபெருமானுக்கு, ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் பாராட்டினார்.
பாட்டுப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர் எஸ்பி பாராட்டு சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில்
previous post