பாடாலூர், ஏப்.23: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் .காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்ரா பவுர்ணமி வருவதற்கு முதல் நாள் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் மலர் மாலைகள், பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர்வரிசை கொண்டு வந்து கலந்து கொண்டனர். கோயில் மண்டபத்தில் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் எழுந்தருளிய சுவாமி, மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பாடாலூர் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.