ஆம்பூர், பிப்.5: ஆம்பூரில் தடையை மீறி நடைபயணம் செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி ஆம்பூர் பஸ் நிலையம் துவங்கி நேதாஜி ரோடு வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், நேதாஜி ரோட்டில் டவுன் போலீஸ் நிலையம் எதிரே வேனில் இருந்தபடி பேசினார்.
சுமார் ஒரு மணிநேர பிரசாரத்திற்கு பின்னர் குடியாத்தம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நேற்று ஆம்பூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் வாசு, நகர தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட 12 பேர் மீது குற்ற எண் 84/2024 ஐபிசி 147, 188, 341 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.