புதுச்சேரி, ஏப். 5: வில்லியனூர் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் என்னை கொலை செய்ய திட்டம் போட்டதால் அவரை கொலை செய்தேன் என கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி நித்தியானந்தம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி, வில்லியனூர், கணுவாப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமரன் (43). மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளரான இவர் கடந்த 26ம்தேதி வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் திருக்காஞ்சி ரவுடி நித்தியானந்தம் (42), சிவசங்கர் (23), ராஜா (23), கார்த்திகேயன் (23), வெங்கடேஷ் (25), பிரதாப் (24), விக்னேஷ் (26) உள்பட 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் மேற்கு எஸ்பி வம்சிதர்ரெட்டி தலைமையில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் காவலில் எடுத்து 6 நாட்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 6 கத்திகள், 3 பைக்குகள், 1 கார் மற்றும் 2 நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ரவுடி நித்தியானந்தம் கூறுகையில், நானும், செந்தில்குமரனும் ஒன்றாக தான் இருந்தோம். ஆனால் பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டோம். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி என்னுடன் இருக்கும் கணுவாப்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை அப்பகுதியை சேர்ந்த முகிலன் என்பவர் ஆரியப்பாளையம் பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் என்னையும், என் நண்பர்களின் பெயர்களையும் செந்தில்குமரன் தான் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி போலீசில் கூறி சேர்த்தார்.
மேலும், என்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக தகவல் கிடைத்தது. என்னை கொலை செய்யும் முன் செந்தில்குமரனை கொலை செய்ய கடந்த ஒரு மாதமாக திட்டம் ேபாட்டு என் நண்பர்களுடன் சேர்ந்து கண்காணித்து வந்தோம். கடந்த 26ம் தேதி செந்தில்குமரன் தனியாக நின்றுகொண்டு இருந்தார். இதனை பயன்படுத்தி உடனடியாக கூட்டாளிகளை வரவழைத்து வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தேன். இவ்வாறு கூறினார். அவர்கள் 7 பேரையும் காவல் விசாரணை முடித்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.