புதுடெல்லி: பாஜ தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பார், ஆனால் தற்போது பின் இருக்கைக்கு சென்றுவிட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினரிடையே முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கட்சி அமைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலேயே இருந்திருந்தால் முதல்வராக ஆகியிருப்பார். ஆனால் பாஜவில் பின் இருக்கைக்கு சென்றுவிட்டார். சிந்தியாவிற்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக அமைப்பை வலுப்படும் வாய்ப்பு இருந்தது. ஒரு நாள் நீங்கள் முதல்வராவீர்கள் என்று கூறினேன். ஆனால் அவர் வேறு வழியை தேர்வு செய்துவிட்டார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அங்கே அவரால் ஒருபோதும் முதல்வராக முடியாது. அதற்காக அவர் மீண்டும் இங்கே வரவேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து போராடுங்கள். யாருக்காகவும் பயப்பட தேவையில்லை” என்றார்….