செங்கம், மார்ச் 29: செங்கம் அருகே ஜவ்வாது மலை வனப்பகுதியில் மான் வேட்டையாட சென்றபோது பாஜக பிரமுகரை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவார கிராமமான கோயில் கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (27) பாஜக பிரமுகர். இவர் தனது நண்பர்களோடு வன விலங்குகளை வேட்டையாட கடந்த மாதம் 8ம் தேதி சென்றனர். இந்நிலையில் 13ம் தேதி அன்று குண்டு பாய்ந்து இறந்த நிலையில் சடலமாக ஏழுமலை கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஏழுமலையின் தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பேரில் வன விலங்குகளை வேட்டையாட சென்ற 12 பேர் மீது செங்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வந்தனர். இதில் ஏற்கனவே காசி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று கோயில் கொல்லை கிராமம் அருகே ராமன் (56) என்பவரை செங்கம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 12 பேரில் இதுவரை ஐந்து பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.