அமிர்தசரஸ்: அரசர்கள் ஆட்சி செய்த போது ஒற்றர்கள், புறாக்கள் மூலம் உளவு பார்த்து வந்தனர். தற்போது வரை இந்த உளவுமுறை இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் ரூர்வாலா எல்லை நிலை அருகே பாதுகாப்பு படை வீரரின் தோள் மீது சில தினங்களுக்கு முன் புறா ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. அது, பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதித்த போது, அதன் கால்களில் தொலைபேசி எண்ணுடன் கூடிய காகிதம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த புறாவை எடுத்து கொண்டு காவல் நிலையம் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், அந்த புறா பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி உளவு பார்ப்பதற்காக இந்தியா வந்துள்ளது. அதன் கால்களில் தொலைபேசி எண்கள் கட்டிய காகிதம் இருந்தது. எனவே, புறாவின் மீது எப்ஐஆர் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்பி துருவ் தகியா, “புறா ஒரு பறவை. எனவே, அதற்கு எதிராக எப்ஐஆர். போடுவது என்பது நடக்காத காரியம். இருப்பினும், இது தொடர்பாக சட்ட வல்லுனர்களை தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனை, கருத்துகளை கேட்டறிய தகவல் அனுப்பி உள்ளோம்,’’ என்றார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உளவு புறா தற்போது காங்க்ரா காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது….