இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சிக்கூர் அருகே ரோகியில் இந்து மதத்தை சேர்ந்த 18 வயது சிறுமி பூஜா துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். தெருவில் சென்ற சிறுமியை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. நேற்று இரவு பூஜா தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் நடத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்திச்செல்ல முயன்றுள்ளது. பூஜாவை கட்டாய திருமணம், மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாஹித் லஷ்கரி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து கடத்தல் முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது பூஜா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாஹித் மற்றும் அவனது நண்பர்கள் பூஜாவை நடுத்தெருவில் துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பூஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பூஜாவின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான வாஹித் லஷ்கரியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பூஜாவை ஏற்கனவே கடத்தி கட்டாய திருமணம் செய்ய வாஹித் முற்சித்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது முறை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாஹித் லஷ்கர் தெரிவித்தார். பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ மற்றும் இந்துக்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1.60 சதவீதமாகவும், சிந்து மாகாணத்தில் 6.51 சதவீதமாகவும் உள்ளதாக புள்ளியியல் விவரம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …