ஊத்துக்கோட்டை: பாகல்மேடு கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பாகல்மேடு ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த பெரியபாளையம், திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது. அதனால் அதிக அளவில் வாடகையாக பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே பாகல்மேடு பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1998-1999ம் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்றனர். பின்னர் 10 வருடத்திற்கு பிறகு சமுதாய கூடம் பழுதடைந்துள்ளது. இந்நிலையில் பழுதடைந்த சமுதாய கூடத்தை கடந்த ஆண்டு ரூ..75 ஆயிரம் செலவில் பழுது பார்க்கும்பணி நடைபெற்று புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு சமுதாயக்கூடம் கடந்த 9 வருடங்களாக பயன்பாடில்லாததால் தற்போது புதர்கள் மண்டி பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்களின் கூட்டாறமாகி யாருக்கும் பயனற்ற நிலையில் உள்ளது. எனவே பாகல்மேடு சமுதாயக்கூடத்தை சுத்தம் செய்து அதை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என மக்கள் கோரிக்கைவைத்தனர்.