சேலம், பிப்.7: பெங்களூருவில் இருந்து சேலம் வழியே மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்சில் போதை புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இதன் பேரில், சேலம் பள்ளப்பட்டி போலீசார், புதிய பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம், எஸ்ஐ பரமசிவம் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில், சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில், அந்த பையில் ₹6,560 மதிப்புள்ள போதை புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து வாலிபரிடம் விசாரித்தனர். அவர், தேனி மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பதும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பஸ்சில் குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது
previous post