ஓசூர், செப்.1: ஓசூர் அடுத்த மோரணப்பள்ளி கிராமத்தில், ராகு-கேது அதர்வண மகா பிரத்தியங்கரா தேவி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ராகு, கேது மற்றும் மகா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு யாக சாலையில், மிளகாய் வற்றல் சமர்ப்பிக்கும் பூஜை நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருஷ்டி கழிக்கும் விதமாக, மிளகாய் வற்றலை யாக குண்டத்தில் போட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.