ஈரோடு, மே 14: பவானி வட்டாரத்தில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகின்றது. குறிப்பாக பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையின் காரணமாக பவானி வட்டத்தில் மானாவாரி நிலங்களில் உழவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அடுத்து தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழை காலத்தின் போது நிலக்கடலை, தட்டைபயிர், கம்பு உள்ளிட்டவைகளை பயிரிட நிலத்தை ஆயத்தப்படுத்த இந்த மழை பயனுள்ளதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.