பெரம்பலூர்,செப்.20: பெரம்பலூர் நகரில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் முந்தைய நாள் உணவை, சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்த 2 ஓட்டல்களுக்கு அபராதம் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) டாக்டர் கவிக்குமார் உத்தரவின் பெயரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் (பெரம்பலூர்) சின்னமுத்து, (வேப்பூர்) இளங்கோவன், (வேப்பந்தட்டை-ஆலத்தூர்) ரவி ஆகியோர் பெரம்பலூர் நகரில் உள்ள 12 அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது 2 ஓட்டல்களில் உள்ள பிரிட்ஜில் ப்ரைட் ரைஸ் செய்வதற்காக வேக வைத்த 2 கிலோ சாதம், நூடுல்ஸ், அரை கிலோ வறுத்த சில்லி சிக்கன் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை சோதனை செய்த போது, அவை ஒரு நாளுக்கு முன்பே பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து முந்தைய நாள் சமைத்த உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்திருந்த 2 ஓட்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோல் முந்தைய நாள் தயாரித்த அசைவ உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரித்தனர்.