Wednesday, May 15, 2024
Home » பழமையான ஒரு டன் எடைகொண்ட இரும்பு லாக்கர் பெட்டி போராடி திறப்பு 1927ல் வெளியான பத்திரிகை இதழ், சில்லரை காசுகள் இருந்தன குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கருதப்பட்ட

பழமையான ஒரு டன் எடைகொண்ட இரும்பு லாக்கர் பெட்டி போராடி திறப்பு 1927ல் வெளியான பத்திரிகை இதழ், சில்லரை காசுகள் இருந்தன குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கருதப்பட்ட

by Karthik Yash

குடியாத்தம், செப். 12: குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கருதப்பட்ட பழமையான 1 டன் எடை ெகாண்ட இரும்பு லாக்கர் பெட்டியை அதிகாரிகள் முன்னிலையில் தொழிலாளர்கள் போராடி திறந்தனர். அதற்குள் 1927ம் ஆண்டு வெளியான பத்திரிகை இதழ் மற்றும் சில்லரை காசுகள் மட்டும் இருந்தன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமத் இம்தியாஸ்(59). இவர் ஜோதி மடம் பகுதியில் நார் கம்பெனி நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான சுமார் 1 டன் எடை கொண்ட இரும்பு லாக்கர் பெட்டியை கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அதே பகுதியில் உள்ள மசூதி அருகில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் மசூதி அருகில் மர்மமான புதையல் பெட்டி இருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இரும்பு பெட்டியை வருவாய் துறையினர் திறக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து போலீசார் முஹம்மத் இம்தியாஸிடம் விசாரணை செய்ததில், 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெட்டியை விலைக்கு வாங்கியதாகவும், தற்போது இதனை வைத்து பராமரிக்க முடியாததால் மசூதிக்கு கொடுக்க இங்கே எடுத்து வந்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த இரும்பு பெட்டியை வருவாய் துறையினர் குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒரு அறையில் வைத்து சீல் வைத்தனர். இந்நிலையில், வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் படி தாசில்தார் விஜயகுமார் தலைமையில் தொழிலாளர்கள் நேற்று இரும்பு பெட்டியை பொதுமக்கள் முன்னிலையில் உடைத்து திறந்தனர். அதில், சில பழங்கால நாணயங்கள் உட்பட சில நாணயங்கள் மற்றும் கடந்த 1927ம் ஆண்டு வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிக்கை இதழ் இருந்தது. பின்னர் வருவாய் துறையினர் பெட்டியை அதன் உரிமையாளர் மற்றும் மசூதி நிர்வாகிகளிடம் கடிதம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்தனர். குடியாத்தம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் தரணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

You may also like

Leave a Comment

thirteen + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi