பழநி, அக். 14: பழநி கோயிலில் நவராத்திரி விழா நாளை காப்புக்கட்டுதலுடன் துவங்க உள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழா நாளை மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்திச் சொற்பொழிவு, மங்கள இன்னிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் 9வது நாளான 23ம் தேதி மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.
பிற்பகல் 3 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். தங்கரத புறப்பாடு நிறுத்தம் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வரும் நாளை முதல் அக்டோபர் 23ம் தேதி வரை 9 நாட்களுக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்யப்படும். 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறுமென கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.