பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 2012ம் ஆண்டு கிழக்கு கிரி வீதியில் சுற்றுலா பஸ் நிலையம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தங்களது விவசாய நிலங்களில் விடப்படுவதாகக் கூறி விவசாயிகள் ரவிச்சந்திரம், விஜயலட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பழநி சப்.கலெக்டர், நகராட்சி ஆணையர், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இக்குழு பசுமை தீர்ப்பாயத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சுற்றுலா பஸ் நிலையம் மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள 36 கழிவறைகள் மற்றும் 28 குளியலறைகளின் கழிவுநீர் விவசாய நிலத்திற்குள் விடப்படுவதாக தெரிவித்தது. மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்கு விதிக்கப்பட வேண்டிய இழப்பீடு தொகையை கணக்கிட அறிக்கையில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிபொறியாளர் உதயா தலைமையிலான குழுவினர் மண் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். அபராதத்தொகையை விரைவில் நிர்ணயம் செய்து விரைவில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….