திருச்சி: திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் காவல் ஆய்வாளர் மணி மனோகரன், காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி சோமரசம்பேட்டை குறிஞ்சி நகர் அருகே ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் படி சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை தேடி வந்த நிலையில், திருச்சி மணப்பாறை அருகே உள்ள வாத்து பண்ணைக்கு இந்த ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாத்து பண்ணையின் உரிமையாளர் மணப்பாறையை சேர்ந்த பாரதி மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த கரூர் லாலாபேட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வனையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி தமிழ்ச்செல்வன்(33) கைது செய்யபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள மணப்பாறை சேர்ந்த பாரதி என்பவரை தேடி வருகின்றனர்.