சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேளாண்மை துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, தேர்தல் வாக்குறுதியில் அளித்த 5 அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பிறகு முதல்வரின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பாட்டார். தொடர்ந்து, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார். மேலும் தங்களுடைய துறைகளில் சிறப்பாக செயல்படாத அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை அப்பணியில் இருந்து விடுவித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கொரோனாவை ஒழிக்க மருந்துகள், ெபாருட்கள், ஊழியர்கள் நியமனம், கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு, தங்கும் விடுதி ஏற்பாடு செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் மெரினா கடற்கரையில் 17.2 கோடிக்கு 900 வண்டிகள் வழங்குவதற்கான டெண்டர் உட்பட மாநகராட்சி சார்பில் விடப்பட்ட பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தம் ஒரு சில நிறுவனத்துக்கு முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. அதைப்போன்று ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாடுகள் எழுந்தது. சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று வருடங்களாக அதிக விலைக்கு ஆற்று மணலை வாங்கியதாக கூறி எம்சாண்ட்டை கட்டுமான பணிக்கு பயன்படுத்தி கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் உள்ளது. இது தொடர்பாக ஆதாரத்துடன் தமிழக அரசுக்கு புகார் சென்றிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. …