ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், பூசிமலைக்குப்பம் ஊராட்சியில் முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் அதே பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்கில் இருந்த தண்ணீரை குடித்தனர். அப்போது, குடிநீர் குழாய் வழியாக இறந்த பல்லி ஒன்று வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று, பல்லி இறந்த தண்ணீர் குடித்த தகவலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.சிறிது நேரத்தில், பல்லி விழுந்த தண்ணீரை குடித்த ஆஷிகா(14), தர்ஷன்(10), சுபாஷினி(13), பூவரசன்(9), கோபிகா(12), தர்ஷன்(8), கோபாலகிருஷ்ணன்(13), ரத்தீஷ்(7), காயத்ரி(11), கனிஷ்கா(5) ஆகிய 10 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும் 10 சிறுவர்களும் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்லி விழுந்த தண்ணீரை குடித்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….