கொல்கத்தா: மேற்குவங்க பல்கலைக்கழகங்களுக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுவாக எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் என்பவர் செயல்படுகிறார். பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. அதேபோல் வேந்தரை நியமிப்பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார். மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் கொல்கத்தா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதற்கு ஆளுநர் வேந்தராக செயல்படுகிறார். இதனிடையே, பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெக்தீப் தன்கர் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க பல்கலைக்கழகங்களுக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அடுத்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அவையின் ஒப்புதலும் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலை. வேந்தராக ஆளுநர் செயல்பட முடியாதபடி மே.வங்க பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. …