மாமல்லபுரம், செப் 21: மாமல்லபுரம் கடலில் அமைதியான முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதனை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18ம் தேதி பொதுமக்கள், இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு, பாலூர், சிங்கப் பெருமாள் கோவில், மறைமலைநகர், படாளம், திருக்கழுக்குன்றம், மானாம்பதி, மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 3 நாட்கள் வழிபாடு நடத்தி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் 40க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மேள, தாளம் முழங்க நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாலை போட்டும், கற்பூரம் ஏற்றியும் விநாயகரை வணங்கி தோளில் தூக்கி சென்று அமைதியான முறையில் கடலில் கரைத்தனர். அப்போது பாதுகாப்பு பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி சாய் பிரணீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.