ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (45). இவரது மனைவி இந்திராணி (42). இவர்களது மகள் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகன் ராஜபாளையத்தில் உள்ள கல்லூரியிலும் படித்து வருகின்றனர். கணேசன், இந்திராணி தம்பதியர் அதே பகுதியில் வீட்டின் அருகே சொந்தக்கட்டிடத்தில் பெட்டிக்கடையில் பலசரக்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். நேற்று வழக்கம் போல இருவரும் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.கடைக்குத் தேவையான காய்கறிகளை வாங்க ராஜபாளையம் மார்க்கெட்டிற்கு கணேசன் சென்று விட்டார். கடையில் இந்திராணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், இந்திராணியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து கடைக்கு வந்த கணேசன், மனைவி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராணியின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….