ஈரோடு, நவ.30: பருவமழை எதிரொலி காரணமாக வைரஸ் காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகலாக திடீரென மழை பெய்து வருகிறது. பகலில் சில நேரங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி ஒரே வருகின்றன. மேலும், இரவில் குளிர் அதிகரித்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் கடும் அவதிக்குள்ளாகினனர்.
இப்பருவமழை காரணமாக ஈரோடு நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கடந்த சில நாள்களாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இருமலுடன் கூடிய சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாநகரம் மற்றும் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாள்கள் வரை ஆகிறது. இந்த காய்ச்சலால், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பருவமழைக் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் வருவது இயல்புதான் என்றாலும், இதுபோன்ற சளி, இருமலுடன் காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும். 3 நாள்களுக்கு மேல் மேல் காய்ச்சல், சளி, இரும்ல் இருந்தால் மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் தாங்களாகவே மருந்துகள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தவிர, தங்களது வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், உரல்கள் பாத்திரங்கள் தண்ணீர் தேங்காமல் மூடி வைப்பது அவசியம். மேலும், காய்ச்சல் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்ற மருந்துகளைக் காய்ச்சி குடிக்கலாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.