பரமக்குடி, ஜன.31: பரமக்குடி ரயில் நிலையத்தில் ஏடிஎம் வசதி செய்து தர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை- ராமேஸ்வரம் ரயில் நிலைய மார்க்கத்தில் பரமக்குடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை,திருப்பதி திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 200க்கும் மேற்பட்டோர் விரைவு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் டிக்கெட் எடுப்பதற்கும், முன்பதிவு செய்வதற்கும் பணம் தேவைப்படும் போது ஏ.டி.எம். மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், தற்போது ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பரமக்குடி ரயில் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த வேண்டும் என, ரயில் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.