* சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் ஐஜியால் பல நூறு கோடி அரசுக்கு இழப்பு அம்பலம்சென்னை: பரந்தூர் விமானநிலையத்துக்கு நிலம் எடுப்பு விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த முறைகேட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் ஐஜி சீனிவாசன், கடந்த 10 ஆண்டுகளில் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை அருகே 2வது விமானநிலையம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், செங்கல்பட்டு மாவட்டம் படாளம் ஆகிய இடங்களில் விமானநிலையம் அமைக்கலாம் என்று அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. சமீபத்தில் பரந்தூரில்தான் விமானநிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், பரந்தூரில் 73 ஏக்கர் நிலத்தை விவசாய நிலமாக பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் உரிமையாளர்களில் ஒருவரான லட்சுமிபாய் என்பவரது பெயரில் வாங்கியுள்ளனர். இந்த நிலம் உள்ள இடத்தில்தான் விமானநிலையம் வருவதால், இந்த நிறுவனம், பத்திரப்பதிவுத்துறையில் கூடுதல் ஐஜியாக இருந்த கே.வி.சீனிவாசன் மூலம் ஒரு சில பகுதிகளை மட்டும் சதுர அடியில் 2020 மார்ச் மாதம் பதிவு செய்துள்ளது. மொத்த நிலத்தையும் சதுர அடியில் பதிவு செய்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆனால் அதில் குறைந்த இடத்துக்கு மட்டுமே சதுர அடியாக பதிவு செய்துள்ளனர். ஆனால் அதில் மொத்த சர்வே எண்ணையும் குறிப்பிட்டு விட்டனர். இதனால் அரசு ஆவணத்தில் 73 ஏக்கரும் சதுர அடியாக மாற்றப்பட்டு விடும். இதில் அரசுக்கு ரூ.165 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இது குறித்து புகார்கள் வெளியானதும், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் உத்தரவின்பேரில், பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், கூடுதல் ஐஜி கே.வி.சீனிவாசன் உத்தரவின்பேரிலேயே இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்தநிலையில், 73 ஏக்கர் நிலம் வைத்துள்ள பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் நிறுவனத்தின் சார்பில், அதன் உரிமையாளர் லட்சுமி பாய், 2020 பிப்ரவரி மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு கடிதம் கொடுக்கிறார். இந்த கடிதத்தில், தனக்குச் சொந்தமாக குறைந்த அளவே நிலம் உள்ளது (நிலத்தின் அளவை குறிப்பிடாமல் சர்வே எண்ணை மட்டும் குறிப்பிட்டுள்ளார்), இந்தநிலம் எங்கள் மூதாதையர்களுக்குச் சொந்தமானது. இந்த நிலத்தை நம்பித்தான் நாங்களும், எங்களது பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு வேலை தெரியாது. இந்த நிலத்தை தவிர வேறு எங்களுக்கு நிலமோ, சொத்தோ கிடையாது. மேற்கண்ட நிலத்தை பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கு நிலம் எடுப்பிற்காக அரசு அதிகாரிகள் நிலத்தை அளந்து சென்றுள்ளனர். இந்த நிலத்தை தவிர வேறு நிலம் இல்லாத காரணத்தால் எனது நிலம் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யாமல், எனது நிலத்தை ஒரு ஓரமாக எடுத்துக் கொள்ளுமாறு துணை முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்ற கூறியுள்ளனர்.இந்த கடிதத்தில் முழுக்க முழுக்க பொய்யான தகல்களே இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடிதத்தில் நிலத்தின் மொத்த பரப்பளவை குறிப்பிடவில்லை. அதற்கு பதில் சர்வே எண்ணை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். தங்களுடைய மூதாதையர்களின் சொத்து என்று கூறியுள்ளனர். அதுவும் முழு பொய் என்று கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் திட்டமிட்டு, இங்கு விமானநிலையம் வரும் என்பதற்காகவே வாங்கப்பட்ட நிலம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிலத்தை தவிர வேறு நிலம் இல்லை என்று ஏதோ 2 ஏக்கர் அல்லது 5 ஏக்கர் மட்டுமே இருப்பதுபோன்று கூறியுள்ளனர். மொத்த இடம் 73 ஏக்கர். மேலும் இந்த நிறுவனத்தின் பெயரில் அதே பகுதியில் பல நூறு ஏக்கர் உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தது 500 முதல் ஆயிரம் ஏக்கர் வரை இருப்பதாக கூறப்படுகிறது.எங்கள் நிலத்தில் ஒரு ஓரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு காரணம், விவசாயி, நிலம் பாதிக்கப்பட்டால் அவர்களால் வாழ வழியில்லை என்று கூறி நிலத்தின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த காரணத்தை கூறியுள்ளனர். இந்த உண்மை எல்லாம் தெரிந்தும், தெரியாததுபோல, எந்த விசாரணையும் செய்யாமல், துணை முதல்வரின் அலுவலகத்தில் இருந்து, துணை முதல்வரின் பெயரில், அவரது சிறப்பு உதவியாளர், அப்போது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்புகிறார். இந்த மனுவை கனிவாக பரிசீலிக்க வேண்டும் என்றும் அதில் துணை முதல்வர் கூறியுள்ளார். இந்த கடிதத்தின்படி விவசாய நிலம் என்பதால், கூடுதலாக விலை நிர்ணயம் செய்வதற்காகவே இந்த பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அவரது உதவியாளர் தவறு செய்தது தெரிந்தால், ஏன் அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. யார் உதவி கேட்டாலும் கடிதம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தாலும், இவரது துறைக்கு சம்பந்தமில்லாத துறைக்கு எப்படி அவர் கடிதம் கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது. அப்போது பன்னீர்செல்வம், வீட்டு வசதித்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகத்தான் இருந்தார். நிதி அமைச்சராக இருந்தவரே அரசின் இழப்புக்கு உடந்தையாக இருப்பதுபோன்ற ஒரு கடிதத்தை கொடுக்கலாமா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.மேலும், இதே காலக்கட்டத்தில்தான், இந்த நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை மாற்றி கே.வி.சீனிவாசன் உத்தரவின்பேரில் பதிவு செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. மேலும், அப்போது அமைச்சர்களாக இருந்த 3 பேர் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்து பரந்தூரில் பினாமிகள் பெயரில் நிலத்தை வாங்கிக் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறைகேட்டை தீவிரமாக விசாரித்தால், விமானநிலையத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களை ஆய்வு செய்தாலே பலரும் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.அதேநேரத்தில், கூடுதல் ஐஜியாக இருந்த சீனிவாசன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர் 6 ஆண்டுகள் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட பதிவாளராக இருந்துள்ளார். அதிக நாட்கள் இருந்ததால், அந்தப் பகுதியில் உள்ள பத்திர எழுத்தர்கள் அனைவரும் பழக்கம். அதன் மூலம் தொழில் மாவட்டமாக உருவாகியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதோடு நிற்காமல், திருச்சி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் பிஏசிஎல் நிலங்களையும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதிவு செய்ய இவர் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது. மேலும், இவரது உத்தரவின்பேரில் அரக்கோணத்தில் நெல்லையைச் சேர்ந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர், இந்த மாவட்டங்களில், வழிகாட்டி மதிப்பை குறைப்பதற்காக 47 ஏ என்ற பிரிவுக்கு மாற்றுவது, தொழில் மற்றும் மனை பிரிவுகளை விவசாய நிலங்கள் என்று பதிவு செய்வது, சிப்காட்டுக்கு எடுக்கப்படும் நிலங்களை வாங்கி தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்க உதவியாக இருப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர் 6 ஆண்டு மாவட்ட பதிவாளராக இருந்த காலங்கள் மட்டுமல்லாது, கூடுதல் ஐஜியாக பதவி ஏற்ற பிறகு இவரது உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் எந்த வகையில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை விசாரிக்க உத்தரவிட்டால் பல ஆயிரம் கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இவரது மகள் பெயரில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 100 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் பெயரில் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. இவை எல்லாமே இவர் பதவிக்கு வந்த பிற்கு தொடங்கப்பட்டவை. இதனால் இவர் பதவி காலத்தில் செய்த முறைகேடுகளை தீவிரமாக விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட முறைகேட்டை மட்டும் விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….