சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என தொழில்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “பசுமை விமான நிலையம் – தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி“ குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினரும் டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு அதிகரித்துவரும் விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான தேவைகள், விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் கண்ணோட்டத்தில், தற்போதைய சென்னை விமான நிலையத்தில் எதிர்கொண்டு வரும் சவால்கள், இப்புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான அவசியம், புதிய விமான நிலையத்தில் பன்னாட்டு தரத்தில் அமைக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால் மாநிலத்தில் தொழில் பெருக்கம், வர்த்தக வளர்ச்சி மற்றும் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகள், இவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார பலன்கள் குறித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் “அரசின் கண்ணோட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி” குறித்து விளக்கக் காட்சிகளுடன் விரிவாக எடுத்துரைத்தார்….