ராசிபுரம், மார்ச் 25: ராசிபுரத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் தூங்கிக் கொண்டும், செல்போனில் சமையல் குறிப்புகளை பார்த்துக் கொண்டும் இருந்த அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்-சேலம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் கலந்து கொண்டு, அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, வெளி மாவட்டங்களில் பணி புரியும் அலுவலர்கள், தபால் வாக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என கூறினார்.
அதனை தொடர்ந்து, அலுவலக பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அலுவலர்கள் அதனை கவனிக்காமல், செல்போனில் சமையல் குறிப்புகளை பார்த்துக் கொண்டும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டும் இருந்தனர். சில அலுவலர்கள் தூங்கிக் கொண்டும், ஒரு சிலர் நகைகள் குறித்து விசாரித்துக் கொண்டும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.