பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகில் பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு தலைவரும் நகர திமுக செயலாளருமான வே.கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு, திமுக கொடியேற்றி பேராசிரியர் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், “பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வேண்டு கோளுக்கிணங்க பல்லாவரத்தில் இருந்து பம்மல் மார்க்கமாக குன்றத்தூர் செல்லும் பிரதான சாலை விரைவில் 100 அடி சாலையாக மாற்றப்படும். இதற்கான பணி விரைவில் நடைபெறும். இந்த பணியால் வியாபாரிகள், பகுதி வாசிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் 80 சதவீத இழப்பீட்டு தொகை வழங்கப்படும்” என்றார். இதையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு பம்மல் மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், பம்மல் நகர திமுக சார்பில் பிரபு, காளேஸ்வரன், வெண்ணிலா பக்கிரிசாமி, மதினா பேகம், பன்னீர் செல்வம், துரை.இளங்கோவன், கல்யாணி டில்லி, ரம்யா சத்தியபிரபு, சத்யா மதியழகன், இன்பசேகர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பம்மல் நகர திமுக செய்திருந்தது….