ஊட்டி,பிப்.9: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு வனங்கள் காய்ந்துள்ள நிலையில் உணவிற்காகவும், நீருக்காகவும் விலங்குகள் இடம் பெயர துவங்கியுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முதுமலை, தெப்பக்காடு, கக்கநல்லா, மசினகுடி, மாயார், மாவனல்லா, சிறியூர்,சிங்காரா ஆகிய வனப்பகுதிகளில் யானை,புலிகள்,கரடி,காட்டெருமை,மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
அதே போல் இந்த வனப்பகுதியில் ஈட்டி,தேக்கு மரம் உட்பட பல்வேறு விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இப்பகுதியில் அதிகமாக காணப்படுவதாலும்,அதே சமயம் மழையின்மை காரணமாகவும் வனப்பகுதிகளில் உள்ள சிறிய செடி,கொடிகள் காய்ந்து விடும்.
இது போன்ற சமயங்களில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படும் காட்டு தீயினால் பல ஹெக்டர் பரப்பளவிலான வனங்கள் எரிந்த நாசமாவது வழக்கம்.இந்நிலையில், தொடர் பனிப்பொழிவால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனங்கள் காய்ந்து போயுள்ளன.மழை பெய்யவில்லையெனில், ஆங்காங்கே தெரியும் பச்சை நிறங்கள் கூட ஓரிரு நாட்களில் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இதனால், யானை,மான்கள் உட்பட அனைத்து விலங்குகளும் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி செல்ல துவங்கியுள்ளன.